Thursday, November 30, 2006

என்னைப் பாதித்ததில் இதுவும் ஒன்று.....!

இந்த ஆக்கம் எழுதப்படுவதன் நோக்கம் எவ்வித பக்கச்சார்பினையோ, மதச்சார்பினையோ கொண்டமைந்ததாக அல்ல என்பதனை தெரிவிப்பதுடன், அண்மைக்காலங்களில் என்னை மிகவும் பாதித்த சம்பவங்களில் இதுவும் ஒன்னென்ற வகையில் இவ்வாக்கத்தினை எழுதுகின்றேன். இவ்வாக்கத்திற்காக எனக்கு துணைநின்ற திருமறைக்கலாமன்ற கலைமுகம் சஞ்சிகைக்கும் என் நன்றிகள்.


வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகள்.


கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அனைத்துலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை வழிநடத்தியது மட்டுமல்லாது உலக அமைதி, ஒற்றுமை, பல்சமய இணக்கப்பாடு என இன்றைய உலகம் தவறவிட்டுக்கொண்டிருக்கும் உன்னதமான விடயங்கள் பலவற்றுக்காகவும் ஓயாது குரல்கொடுத்துவந்த திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் (இரண்டாம் யோவான் பவுல்) அவர்களின் மறைவும், அதனைத் தொடர்ந்து புதிய திருத்தற்தையாக தெரிவுசெய்யப்பட்ட பதினாறாம் ஆசீர்வாதப்பர் (16ம் பெனடிக்ற்) அவர்களின் வரவும் கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்ல, உலக அரங்கிலேயே அண்மையில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்வுகளாகின்றன.


"கரோல் வோய்டிலா" என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் 18.05.1920 இல் போலந்திலுள்ள வாடோவிச் என்னுமிடத்தில் பிறந்தார். 1946 நவம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், 1958 செப்ரெம்பரில் கிராக்கோ மறைமாவட்டத்தி;ன் துணை ஆயராகவும், அதனைத்தொடர்ந்து 1963ல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகவும், பின்னர் 1967 மே 29ல் கர்தினாலாகவும் பணிநிலை உயர்த்தப்பட்டார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுலின் மறைவிற்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது பாப்பரசரான புனித இராயப்பரைத் தெடர்ந்துவரும் 264வது பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகியதன் பின்னர் தனக்கு முன்னர் பாப்பரசராக இருந்து மறைந்த முதலாம் யோவான் பவுலின் நாமத்தை தனக்கும் சூட்டிக்கொண்டு இரண்டாம் யோவான் பவுல் எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார். 1978 ஒக்ரோபர் 16ல் ரோமிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது திருப்பணியை ஆரம்பித்த திருத்தந்தை அவர்கள் அன்றுமுதல் தனது கண்ணியம் மிக்க வழிநடத்தலால் திருச்சபையை நேரிய வழியில் நடத்தி வந்தார். இக்காலத்தில் அவர் மேற்கொண்ட பல முன்னுதாரணமான முயற்சிகளும், செயற்பாடுகளும் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படும், அன்புசெய்யப்படும், தலைவராக அவரை ஆக்கியது.

இந்த மதிப்பும் நேசிப்பும் எத்தகையதாக இருந்தது என்பதற்கு 03.04.2005 சனிக்கிழமை தனது 85வது வயதில் அவர் மறைந்தபோது உலகெங்கிலும் இருந்து சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகளும், 08.07.2005ல் இடம்பெற்ற அவரது இறுதி நல்லடக்க நிகழ்வின்போது குழுமிநின்ற லட்சக்கணக்கான மக்கள் சமுத்திரம் சாட்சியாக விளங்குகின்றன. உலகில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் மரணச்சடங்குகளில் மிகப்பெரிய இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வாக திருத்தந்தை அவர்களின் மரணச்சடங்கு வரலாற்றில் பதிவாகியது.

திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய திருத்தந்தையாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரட்சிங்கர் அவர்கள் தனது 78வது வயதில் 19.04.2005 தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராகிய பின்னர் 16ம் ஆசீர்வாதப்பர் எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டுள்ள புதிய திருத்தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையில் புனித இராயப்பரை தொடர்ந்து வரும் 265வது பாப்பரசர் ஆவர். புதிய பெயரைச் சூட்டிக்கொண்ட பின்னர் அது தொடர்பாக திருத்தந்தை அவர்கள் குறிப்பிடுகையில்இ முதலாவது உலகப்போரின் போது உலக அமைதிக்காக ஓயாதுஇ அயராது போராடியவர் திருத்தந்தை 15ம் ஆசீர்வாதப்பர் ஆவார். அவரது அமைதி முயற்ச்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே எனது புதிய பெயராக அவரது பெயரைத் தெரிவு செய்தேன் என்றார்.

1927இல் ஜேர்மனியில் பிறந்த புதிய திருத்தத்தை 1951 ஜூன் 29 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1977 மே 28இல் மியூனிக் நகர பேராயராக நியமிக்கப்பட்டார்;. தொடர்ந்து 1977 ஜுன் 27இல் அப்போதைய தி
ருத்தந்தை 6ஆம் சின்னப்பரால் மியூனிக் நகர கர்தினாலாக நியமிக்கப்பட்டார். பின் 1998 நவம்பர் 6இல் கர்தினால் குழுவின் துணைத் தலைவராகவும் 2002 நவம்பர் 30இல் கருதினால் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய திருத்தந்தை அவர்கள் தனது பணியினை 24.04.2005இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

Wednesday, November 29, 2006

பலரசம், பலரசம்!

அகராதி·

குடும்பக்கட்டுப்பாடு
பிள்ளைச் செல்வம் விரும்பாதோர் அனுஷ்டிக்கும் விரதம்

உத்தியோகஸ்தன்
காரியாலயத்தில் மாதச்சம்பளத்திற்கு தவம் கிடக்கும் யோகி

சுயநலம்
மனிதன் தன்னைப் புளுகுவதற்காக கடவுள் கொடுத்த வல்லிமை

அன்பு
தான் வாழ்வதற்காக மற்றோருக்கு மனிதன் காட்டும் பாசாங்கு

யுத்தம்
நாகரீகம் எனும் ஓவியத்தை அழிப்பதற்காக அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படும் ‘இறேசர்’

சிரிப்புப் பழமொழிகள்·

  • சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டடி·
  • ஏர் உழுகிறவன் இழப்பமாணால் எருது மச்சான் முறை கொண்டாடும்·
  • அசைந்து தின்கிறது ஆனை, அசையாமல் தின்கிறது வீடு·
  • பொரிமாவை மெச்சினான் பொக்கை வாயன்.
  • கழுதைக்குபதேசம் காதிலே ஓதினாலும் அபயக்குரலே குரல்

சரியில்லை மெத்தச் சரியில்லை·

சொற்பொழிவாளர் பேசும் நேரத்தை நிகழ்ச்சி நிரலில் அறிவித்துவிட்டு பின்பு வரவேற்பாளரே அவருக்கு இடம் கொடாது பேசிக்கோண்டிருப்பது.

சொற்பொழிவாளர் இடையிடையே சபையோர்களே! நேரமாகிவிட்டது அதனால் இரண்டொரு வார்த்தைகள் முக்கியமாகக் கூறிவிட்டு எனது பேச்சை முடிக்கிறேன் என்று விட்டு மேலும் பேசிக்கொண்டிருப்பதுடன் சபையோரை முணுமுணுக்கவைப்பது.

காலம் கடந்து பேசும் சொற்பொழிவாளர் சபையோரின் குழந்தைகள் பசி தாகத்துடன் இருக்கச் சற்றும் லட்சியம் செய்யாது தான் மட்டும் தாகசாந்தி பண்ணிவிட்டு உபதேசம் பண்ணுவது.


இரண்டு கவிதைகள்

மனசு

1.சில நாட்களாய்

இந்தக் கோழி கேருகிறது.

அப்ப? இன்றோ நாளையோ

முட்டையிடும்.

2. வேலி தாண்டியகோழி:

தெருவில் கிடக்கிறது

பேருந்துடன்

மோதுப்பட்டு நசியுண்டு.

3. இடிந்து போகிறது மனசு

ஒரு கோழியின்உயிருக்காகவல்ல

பல முட்டைகளுக்காக.


ஊமை….

வேர்களின்

குறட்டைச் சத்தம் கேட்டும்

சிரிக்கிறது ரோஜாக்கள்.

கிளைகளை நீட்டி

மல்லாக்காய் கிடந்து

காற்றிற்குப் புரள்கிறது மரம்.

ஒவ்வொரு பூவிற்கும்

ஒவ்வொரு உண்மை பூசப்படுகிறது.

ஒரு பூவின் உண்மை

இன்னொரு பூவிற்குப் பொய்யாகவும்

இன்னொரு பூவின் பொய்

இதற்கு உண்மையாகவும்…….

இப்படியாக பூக்களிள் முரண்பாட்டுக்குள்

முறுக்கேறும் சத்தம் கேட்டு

கண்ணயர்கிறது மரம்.

விடிந்ததும் எழுந்து பார்கின்றது

பூக்களெல்லாம் கொட்டிப்போய் கிடக்கின்றது

மூச்சுப்போய்……… மீண்டும் சிரிக்கிறது

மரம் மௌனமாய்……..!

Monday, November 27, 2006

உங்களுக்குத் தெரியுமா?



இப்ப நீங்க மேல பார்த்த படம் திருமறைக் கலாமன்றத்தின் கடைசி ஆற்றுகை அதழின் முலமா எனக்குக் கிடைச்சுது. ஆனா ஒண்டு மட்டும் உண்மை. இந்தப் படத்தில உள்ள ஆக்களெல்லாம் உங்களில ஆராச்சும் ஒருத்தருக்கோ இல்லாட்டி பலருக்கோ சொந்தக்காறரா இருக்குமெண்டு நினைக்கிறன். தயவுசெய்து யாராயிருந்தாலும் இவயளப்பற்றி இத்துனூண்டு அடையாளமாவது எனக்குச் சொல்லுவியளோ? பிளீஸ் ஸ்.....!!! எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே!

Sunday, November 26, 2006

ஆற்றுகை நாடக இதழ்!

புளொக்கர் வாசக நெஞசங்களுக்கோர் இதழ் அறிமுகம்.
" ஆற்றுகை" இது ஒரு நாட அரங்கியலுக்கான இதழ்! யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற -திருமறைக் கலாமன்றம்- எனப்படுகின்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பிரபல்யமான வெளியீடு. கடந்த பல வருடங்களாக இவ் இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் இது ஒரு பயன்மிக்க சிறந்த இதழ்.

உங்கள் தொடர்புகளுக்காக சில தகவல்கள்
வெளியீடு :- திருமறைக்கலாமன்றம்

No.238 Main street, Jaffna, Srilanka.
TP- 0094 021,222,2393

Wednesday, November 22, 2006

மாத்திரைக் கதை...!!


இலட்சியவாதி

ஒரு கல் பூந்தோட்டத்தில் ஏனோ தானோ என்று உலகத்தைப்பற்றி ஒரு கவலையும் இல்லாமல் சும்மா கிடந்தது.
இன்னொரு கல், படிக்கல்லாகி மனிதரை வீட்டுக்குள்ளே இட்டுச்செல்வது என்று இலட்சிய வாழ்வில் ஈடுபட்டது.
என்ன அநியாயம்! பூந்தோட்டத்தின் ஒதுக்குப்புறக் கல்லுக்கு ஒரு தொல்லையும் இருக்வில்லை, இலட்சிய வாழ்வில் ஈடுபட்ட படிக்கல்லையோ அன்றாடம் ஏறுவோரும் இறங்குவோரும் உதைத்துக்கொண்டே இருந்தார்கள்.
பூந்தோட்டத்தினதும் படிக்கல்லினதும் சரித்திரம் தெரிந்த வீட்டுப் பூனை படிக்கல்லுக்காக மிகவும் இரங்கியது. பூனை சொன்னது......
இலட்சியவாதிகளுக்குத்தான் எந்த நாளும் உதை!

குனிவு

குலையைத் தொங்கவிட்டுத் தலை குனிந்து நின்ற வாழை மரத்தைக் காட்டி -குனிந்துநிற்கும் அந்த வாழைமரம் ஒரு கோழைதானே? என்று அணில் நத்தையிடம் கேட்டது.
அணிலின் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்துகொண்ட நத்தை, அணிலுக்கு வாழையின் பெருமையை எடுத்துச்சொல்லியது.
உலகத்துக்குப் பழக்குலையை வழங்கிவிட்ட பெருமையில் அல்லவா வாழை தலைகுனிந்து நிற்கிறது, சாதிப்பவர்களின் அடக்கமே வாழையின் தலைகுனிவு என்றது நத்தை.
நத்தையின் கூற்றை ஏற்று உணர்வுபெற்ற நிலையில் அணில் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது, "வாழை வேறு கோழை வேறு"

பரிசில்

அன்று பாலனின் பிறந்த நாள், ஏழையாகையால் அவன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை.
அன்று மாலை அவனது பணக்கார நண்பன் சுகுமார் வந்து அவன் கையில் ஒரு பார்சலைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டுப் போனான்.
பாலன் பார்சலைப் பிரித்துப் பார்த்தப்போது அதற்குள் விலையுயர்ந்த அழகான பரிசு ஒன்று இருந்தது. அது ஒரு வெற்று மணிப் பேர்ஸ்.

வீடியோச் சிரிப்பு!



நான் திண்டத உங்களுக்கும் பிச்சுத்தாறன் நீங்களும் திண்டுபாருங்கோ. மறக்காமல் மிச்சமாய் ஒரு ஏவறையாவது ஒப்பீனியனா எனக்காக விட்டிற்றுப் போங்கோ.



வீடியோவின் பெருமையினை விரிவாக நான்பாட விநாயகனே நீயென்றும் காப்பு!

வீடியோ என்றொன்று வந்திங்கு அதுகாட்டும் விளையாட்டுக் களவில்லைக் காண்!

வீடியோ இல்லாத விழாவெல்லாம் விழாவில்லை!
விழாவிற்கு வீடியோவே தலை!

கலியாண மண்டபத்தில் வீடியோ ஆடுகின்ற
சதிராட்டத்துக் களவில்லைக் காண்!

சுபமுகூர்த்த வேளைசற்றுக் கடந்தாலும் காத்திருப்பார்
வீடியோ வரும்வரையில் தான்!

வீடியோ வரும்வரையில் குருக்களும் காத்திருப்பார்
வீடியோ பெருமைக்கோர் சான்று!

வீடியோ சொல்லும்வரை தாலியினைத் தொடமாட்டார்
வீடியோ ஆட்சிக்கோர் சாட்சி!

கன்னியவள் முகம்பார்த்துத் தாலியினைச் சூட்டாது
வீடியோ முகம்பார்ப்பான் காளை!

வீடியோ பிடிப்போர்கள் அணிவகுத்து நிற்பதனால்
விழா நிகழ்வு காண்தல் அரிது!

பூப்படைந்த கன்னிக்கு நீராட்டும் விழாவிலது
புரிகின்ற விந்தைகளோ நூறு!

கிணற்றடியில் உருவாக்கும் நீர்வீழ்ச்சியிலே கன்னி
குளிப்பதுமோர் வீடியோக் காட்சி!

கன்னியுடை மாற்றுகின்ற அறையுள்ளே நுழைந்திடவும்
பின்நில்லார் வீடியோ காண்!

சேலையினைச் சீர்செய்வார் கன்னியின் முகம்பிடிப்பார்
சேட்டைகளைப் பார்த்திருப்பர் பெற்றோர்!

மிக்சிங் செய்வதென்று கன்னிக்கு வீடியோ தரும்வதைகள்
ஒன்றல்ல நூறுவரும்!

கன்னியிடம் உண்டாகும் கூச்சத்தில் அரைப்பங்கு
வீடியோ போக்கிவிடும் காண்!

சிறப்பாக வீடியோ அமையுமென்ற ஆசையிலே
சிரித்தபடி பார்த்திருப்பர் பெற்றோர்!

வீடியோ படம்பிடிக்க வரும்போ ததன்பின்னால்
விரைந்துவரும் பெரியதொரு அணி!

குடைபிடிக்கத் திரைபிடிக்க மின் விளக்கும்
பிடிக்கவென்றே குளுவொன்று பின்தொடரக் காண்!

தாமரைக் குளமமைக்கத் தொட்டியுடன் தாமரைப்பூ
வீடியோ கொண்டுவரும் காண்!

விழாவிலே நிகழ்பவற்றைப் படம் பிடிப்பதைவிட்டு
வீடியோ காட்டுமே வித்தை!

விழாவுக்கு வாராது வந்ததென்று பொய்யுரைத்தால்
வீடியோ விளம்பிடுமே உண்மை!

வீடியோ மோகமெங்கள் பண்பாட்டைச்
சிதைக்குதையோ இனியாலும் விழித்திடுவீர்!

Tuesday, November 21, 2006

அப்துல் ரகுமானின்………

“கசல்” அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். அதன் சுதந்திரமும் மென்மையும் நளினமும் நவீனத்துவமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழில் கசல் என்ற பெயரில் ஓரிரு தொகுதிகள் வந்திருந்தாலும், இதுவே தமிழில் முதல் கசல் தொகுதி எனலாம்.

கசல் என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கசல் பெரும்பாலும் காதலையே பாடும். அதிலும் காதலின் சோகத்தைப் பாடும். காதலில் புன்னகைகளை விட கண்ணீர்தானே அதிகம். காதலின் சோகம் என்பது உண்மையில் சோகம் அல்ல, அது ஒரு சுகம்.
மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற அப்துல் ரகுமானின் இக்கவிதைத் தொகுதியிலும் சோகக் கவிதைகளையே அதிகம் காணலாம். அதில் எனக்குப் பிடித்த சில வரிகளையும் உங்களுடன் பகிர விளைகின்றேன்…!


இறைவா!
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நான் பிறப்பதற்கு முன்
இருந்த இடத்தை
நீ ஞாபகப்படுத்துகிறாய்

ஒவ்வொரு பூவும்
உன் காதல் கடிதம்
இந்தக் கவிதைகள்
நீ செய்த காயங்களிலிருந்து
வடியும் இரத்தம்

வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி

என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்

எல்லாப் பூக்களிலும்
உன் வாசம்
என் கனவு
உன் முன் ஏந்திய
பிச்சைப் பாத்திரம்

உன் கண்களால்தான்
நான் முதன்முதலாக
என்னைப் பார்த்தேன்

எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்

ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு

என்மேல்
உன் முகவரியை எழுதினேன்
அதனால் இறந்த கடிதம்
ஆகிவிட்டேன்




Friday, November 17, 2006

வானம்பாடிபற்றி...!

வானம்பாடி இசை பாடும் மேல்நாட்டுப் பறவையாகும். இதன் குரலில் பல ஸ்வரங்கள் உள்ளன. இது பகலிலும் பாடும், இரவிலும் பாடும். ஆனால் நிசப்தமான இரவு வேளையில் மற்ற பறவைகள் தூங்கும்போது இது மட்டும் பாடுவது மிக மிக இனிமையாக இருக்கும். ஆறே ஆறு இஞ்சு நீளமுள்ள பறவையான வானம்பாடியில் பெண் பறவைகள் பாடுவதில்லை. ஒரு தடவைக்கு நான்கைந்து முட்டைகளை போடும். வானம்பாடியை பற்றி க்ரீஸ் நாட்டில் சுவையான கதையொன்றும் உண்டு.