Sunday, December 17, 2006

உள்ளே சென்று பாருங்களேன்..!

என்னை நானாய்.. உங்களை நீங்களாய்.. செதுக்கிக்கொள்ள தேவைப்படுவது கடப்பாரைகளல்ல. கையடக்கமான சிறு உளிகளே..!

நிட்சயம் ஒரு கலைஞனை திட்டமிட்டு எவரும் உருவாக்கிவிட முடியாது. இயற்கையிலேயே கலை ஆர்வத்தால் உந்தப்படுகின்ற மனித இதயம்தான் ஏதோ ஒரு வகையில் அத்துறை சார்ந்த படைப்புக்களில் ஒன்றை தன் விருப்புக்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு தன்னை மறந்து அக்கலையில் லயித்து விடுகின்றது. அது அழகியல் கலையாக இருந்தாலும் சரி! எந்தக் கலைஞனுக்கும் இயற்கையான ஒரு உந்துதல் இருந்தேயாகவேண்டும்.


அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் சிற்பக் கலையை நோக்குமிடத்து... கற்சிற்பம், மரச்சிற்பம், சாந்துச்சிற்பம், உலோக வார்ப்புக்கள் போன்றவை நாமறிந்த காலந்தொட்டு வளர்ந்து வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. இவை பெரும்பாலும் இந்து, கிறிஸ்தவ கோவில்களுக்காக உருவாக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் இந்திய சிற்பிகளே இங்கு வந்து எம்மவருடன் இணைந்து இவைகளைச் செய்திருக்கிறார்கள். இப்பொழுது எம்மவர்களே தனித்து நின்று இவற்றை செய்கின்றார்கள்.

கோவில் தேர்களில் கோபுரங்களில் காணப்படும் தெய்வச் சிலைகள் புராண இதிகாசக் கதைகளைக் கூறுகின்றன. கற்சிற்பங்களை செய்யும் சிற்பிகள் இப்பொழுது வெகுவாகக் குறைந்துவிட்டார்கள். காரணம் செய்வதற்குரிய மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை. உலோக வார்ப்புக்களில் தெய்வாம்சமுள்ள சிலைகள் இப்பொழுது வார்க்கப்படுகின்றது. அன்றுபோலவே இன்றும் எவ்வித மாற்றமுமின்றி வார்ககப்பட்டு வருகின்றது. இதனை கலையென்றோ, வளர்ச்சியென்றோ கூறமுடிவதில்லை. இவைகளை (Creative Art) கலைப்படைப்புக்கள் என்றும் கூறமுடியாது.
எதிலும் நவீனத்துவம் நோக்கியே இன்று உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. நாம் இன்று பின்நவீனத்துவ உலகில் நின்றுகொண்டிருக்கிறோம். இலக்கியம் தொட்டு எந்தக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. சிற்பக்கலையும் அவ்வாறேதான். இதனை அப்ஸ்ரக்ற் (Absetract) என்று கூறுவார்கள். அரூபபாணி – சிம்பாலிக்ஸ் எனப்படும் குறியீடுகளை சிற்பம் பிரதிபலிக்கின்றது. ஒரு சிற்பியோ, ஓவியனோ தனது மன எழுச்சியை, அழுத்தத்தை, உள்ளுணர்வை காட்டுவதற்கு நவீன பாணி பெரிதும் பயன்படுகின்றது. மக்கள் அதனை புரிந்துகொள்ளவும், இரசிக்கவும் பழகவேண்டும்.

இன்றைய இளம் சந்ததி நவீனத்துவத்தையே விரும்புகின்றது. ஒரு சிலை வெறுமனே சிலையாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அது பார்வையாளரை சிந்திக்க வைக்குமானால் அதில் ஒரு சிறப்பு இருக்கின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்து சிற்பக் கலைஞர் திரு A.V. ஆனந்தன் அவர்களுடைய சிற்பங்களை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதில் கிளுக்கிய சில படங்களை புளொக்கர் வாசக நெஞசங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

கீழே காட்டப்பட்டுள்ள சிற்பங்களை பார்த்ததும் அவை எந்தெந்த மரங்களினால் செய்யப்பட்டவை என்பதனை உங்களால் ஊகிக்க முடிகிறதா?
































Thursday, December 7, 2006

எதையும் வெல்லும் பேரறிவு.....!

இவ்வாக்கத்தினை நான் எழுதுகின்ற நோக்கம் இதை வாசித்ததும் உங்களால் உய்த்துணர முடியும். முடிந்தால்.....???

வீட்டுச்சூழல் சின்ன வயசிலேயே என்னை வாசகனாக்கியது. கல்கி, குமுதம், விகடன், ஈழத்துத் தமிழின்பம் எல்லாம் வாசிப்பேன். சுதந்திரனில் வரும் கவிதைப்பூங்காவில் கொய்த பூக்களை கோப்புகளில் பத்திரப்படுத்துவேன்.

இந்த வாசிப்புப் பழக்கம் இளந்தாரி வயசிலேயே என்னையொரு வீட்டுநூலகத்திற்கு சொந்தக்காரனாக்கியது. அரவிந்தர் எல்லோரும் இங்கே ஒன்றாய் குடிகொண்டார்கள். புதுமைப்பித்தன், ஜானகிராமன், ஜெயகாந்தன், பொன்னுத்துரை, சிவத்தம்பி, தழையசிங்கம் எல்லோரும் கூடியிருந்து குலவிக் கதைத்தார்கள். மாணவ நண்பர்கள் கூடிப் படிப்பதற்கென்றே ஊரில் ஒரு விடுதியை உருவாக்கியபோதில் எனது வீட்டு நூலகமும் அங்கு விடுதிகொண்டது. பதிவேட்டில் குறித்துக்கொண்டு பல்வேறு நண்பருக்கும் படிக்கக் கொடுத்தவற்றில் திரும்பி வந்தவை சிலவேதான். ஆனாலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்தியதில்லை.

திரும்பவும் நிரம்பவும் புத்தகங்கள் சேர்ந்தன. இன்று தேடியும் பெறமுடியாத சேகரங்கள், எனது சிறிய முயற்சியில் பதிப்புகள் கண்ட நூல்களின் பலனூறு பிரதிகள், இராணுவம் மூட்டிய தீயில் எரிந்துபோயின...! எனினும் புத்தகங்கள் மீதான காதலை நான் விட்டபாடில்லை.

95ல் திருமலைக்கு இடப்பெயர்வு, இன்னொருபயணம் திரும்பிப்போய் ஊரில் விட்டிற்று வந்த புத்தகங்களை மீட்டுவரலாம் என்ற எனது நம்பிக்கை பொய்த்தது.... பொய்யகிப்போன எமது சமாதானம் போல!

யுத்தம் தொடங்கியது, மீளவும் நூல்களின் சேகரம் இழந்தேன். பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களை இழந்ததுவும் குழந்தைகள் கலைக்கழஞ்சிய தொகுதிகளை இழந்ததுவும்தான் என்னை பாடாய்ப் படுத்தியது. ஆனாலும் புத்தகங்கள் சேகரிப்பதை நான் விட்டதில்லை.

மீண்டும் எனது புத்தகங்களுக்கு வந்தது ஓர் விபத்து. சுனாமி வந்ததும் ஊமையாய்க் கிடந்த உவர்மலையின் ஓடைக்கடல் ஆயிரம் கொடுநாவுகள் வளைத்துவீசி கொண்டுபோனது புத்தகங்களை. எஞ்சிய புத்தகங்களில் இன்னும் அந்தச் சுனாமி நாற்றம் எதையோ எச்சரிக்கை செய்தபடி..... ஆனாலும் என்ன? இன்னமும் புத்தகங்கள் அலுமாரியில் நிறைகின்றன.

தீ தின்னும் தான்,
பெயர்வு பிடுங்கும்தான்,
கடலும் காவுகொள்ளும்தான்....
எனினும் புத்தகங்களால் நான் பெற்ற பகுத்தறிவை,
பூத்து விரிந்தபடி புதிது தேடுகின்ற காதலினை,
எந்தத் தீதான் தின்றுவிடும்?
எந்தப் பெயர்வுதான் பிடுங்கிச்செல்லும்?
எந்தக் கடல்தான் காவுகொள்ளும்?
இனியும் நான் எடுப்பேன் வராக அவதாரம், மண்ணைக்கிண்டி மறுபடியும் வேதம் புதிது கொணர்வேன் இன்னுமொரு நாகரீக எழுச்சிக்கு வித்தாக...!!!
(உங்கள் மனப்பதிவை மறுக்காமல் பின்னூட்டமாய் இட்டுச்செல்லுங்கள்)

பாரதியும்...புதுமைப்பித்தனும்...!!!

எனக்குப் பிடித்த இந்த இரண்டு கண்களின் பார்வைக்கோணைத்தையும் உங்களை நோக்கித் திருப்புகின்றேன். உங்களின் பார்வைக்கோணம் என்னுடன் நேர்கோட்டில் சங்கமிக்கையில் இவ்வாக்கத்தை நீங்களும் சுவைக்கலாம்.

சரி! இனி நோக்குவோம்.....!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்திலே பிறந்தவர். 1921ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியிலே மறைந்தார். புதுமைப்பித்தன் என அழைக்கப்படும் சொ.விருத்தாசலம் 1906ஆம் ஆண்டு கடலூருக்கு அருகாமையிலுள்ள திருப்பாதிரி புலியூரில் பிறந்தார். 1948ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காலமானார். புதுமைப்பித்தன் மகாகவி பாரதிக்கு 24 வயது இளையவர். இருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். தமது கல்லூரிப் படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலே தொடர்ந்தவர்கள். இன்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு அறையில் “எமது மிகச்சிறந்த பழைய மாணவர்களென்று மூவருடைய படங்கள் தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.” அவையாவன மகாகவி பாரதி, புதுமைப் பித்தன், வ.உ.சிதம்பரப்பிள்ளை. மகாகவி பாரதியும், புதுமைப்பித்தனும் ஏறத்தாள ஓரே விதமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் தமது வாழ்வை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே கழித்தனர். புதுமைப்பித்தன் இந்தியா சுதந்திரமடைந்து ஒரு வருடமாவதற்கு முன்னரேயே இவ்வுலக வாழ்வை நீத்தார். பாரதியார் உலக மகாகவி என்ற அந்தஸ்தை அடைந்தவர். புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் “சிறுகதை மன்னன்” என்று போற்றப்படுகின்றார். இருவரும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்தவர்கள். ஆங்கிலேயரின் ஆட்சியை மனதார வெறுத்தவர்கள். நோயும், வறுமையும் அவர்களை இளமையிலேயே சாகடித்து விட்டன. மகாகவி பாரதி தமது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வினை முடித்தார். புதுமைப்பித்தன் காச நோயினால் பீடிக்கப்பட்டு கண்ணீரில் மிதந்தபடியே தமது 42ஆம் வயதில் மறைந்து போனார். மகாகவி பாரதிக்கு தங்கம்மா, சகுந்தலா என்று இரண்டு பெண் குழந்தைகள். புதுமைப் பித்தனுக்கு தினசரி என்று ஒரு பெண் குழந்தை@ இருவருமே தங்களுடைய பிள்ளைகளை உயிருக்கு மேலாக நேசித்தனர். இவ்விருவரும் ஏறத்தாள ஓரே விதமான பின்னணியையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டிருந்த பொழுதிலும் அவர்களுடைய வாழ்க்கைத் தத்துவத்தில் எவ்வளவு வேறுபாடு? ஒரு இலட்சிய வாதிக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் சுப்பிரமணிய பாரதியார். யதார்த்த வாதியின் மொத்த உருவமாகத் திகழ்பவர் புதுமைப்பித்தன். மகாகவி பாரதியின் தெளிந்த சிந்தையையும், நல்ல எதிர்பார்ப்பையும் அவருடைய பாடல்களிலே காணலாம்.
பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால் புன்மையிருட்கணம் போயின யாவும்”
இதனையே தம் வாழ் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தவர் மகாகவி பாரதி. எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள். நல்லபடியே நடக்கும். (Positive Thinking) என்ற மந்திரத்தை ஒலித்தார் நோர்மன் வின்சன்ற் பீல் என்ற அறிஞர். மகாகவி பாரதி தான் ஆவலோடு எதிர்பார்த்த புதிய பாரதத்தை காணும்முன் மறைந்துவிட்ட பொழுதும், எப்பொழுதும் எல்லா எதிர்பார்ப்புகளும் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தன.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது!
சாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது,
தரித்திரம் போகுது! செல்வம் வருகுது,

படிப்பு வளருது, பாவம் தொலையுது!
படிச்சவன் சூதும், பாவமும் பண்ணினால், போவான், போவான்,
ஐயோவென்று போவான்”

பாரதியின் பாடல்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கை தொனிக்கின்றது. வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு என்ற கவிதையிலும், பாரதத்தின் இன்னல்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு, எனினும் இங்கு இவையெல்லாம் நீங்குபவையன்றி நிலைப்பனவல்ல என்று முடிக்கின்றார். புதுமைப்பித்தன் கதைகள், மகாகவி பாரதியின் பாடல்களின் இனிமைக்கு எவ்வளவேனும் குறைந்ததல்ல. அந்த யதார்த்தம் சமுதாயத்தின் பச்சை உண்மைகளைப் பிளந்து காட்டும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் மனங்கொள்ள வேண்டியவை. “அவருடைய குத்தலான நையாண்டி எதிரிகளை இடுப்பில் குத்தி வாங்கும். விபச்சாரஞ் செய்து வயிற்றைக் கழுவுவேனே தவிரப் பிச்சையெடுத்துப் பிழைக்க மாட்டேன் என்று நினைக்கும் யுவதி, அவர் கதாநாயகி, கற்பை விற்றுப் புருஷனைக் காப்பாற்ற விரும்பும் அம்மாள்... அவரது இலட்சியப் பெண். ‘ராமனுக்கு ஒரு நீதி, தனக்கொரு நீதியா?’ என்று குமுறிக் கேட்கும் அகல்யை... அவரது சிருஷ்டி. ஆகவேதான் அவருடைய கதைகள் பலருக்கும் புகைச்சலைத் தந்தன.” “சோகம் மலிந்த வாழ்வில், அனுபவ வேதனையினால் கசப்புற்று, எரிக்குஞ் சிரிப்பைச் சிந்தக் கற்றுக்கொண்ட உள்ளம் புதுமைப்பித்தனுடையது. வாழ்க்கைச் சூழலில் அகப்பட்டிருந்தாலும், அதனினின்றும் சிறிது ஒதுங்கி நின்று வாழ்க்கையைப் பார்த்து, அதில் மிதக்கும் வகை, வகையான வேடிக்கை மனிதர்களின் விந்தை செயல்களைக் கண்டு அவர்களது எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் முதலியவற்றை உணர்ந்து சிரிக்கக் கற்றுக்கொண்ட ஒரு மனித உள்ளத்தின் உணர்ச்சி நாதங்கள் அனைத்தையும் அறிய முடிகிறது புதுமைப் பித்தனின் எழுத்துக்களிலே.” புதுமைப்பித்தனுடைய யதார்த்த வாதத்திற்கு “மனக்குகை ஓவியங்கள்” சிறந்த உதாரணம்.

“பரவெளியிலே பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்திலே, ஆனந்தக்கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்” ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்றாடுகிறான்பக்கத்தில் வந்து நின்றார் நாரதர். “அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க! அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது, தெரியுமா? துன்பம், நம்பிக்கை, வரட்சி, முடிவற்ற சோகம்... தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன. வீணையை மீட்டிக் கொண்டு வேறு திசையைப் பார்த்து நடந்தார் நாரதர்”

மகாகவி பாரதி நல்ல நம்பிக்கையுடன் வாழ்ந்ததோடு அமையாத பரந்த உள்ளமுடையவராயிருந்தார். எல்லா மதத்தவரையும் மனமார நேசித்தார். பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சமவுரிமை பெற்று சிறப்புற வாழ வேண்டுமென்று பாடுபட்டார். அவரிடம் எந்தவிதமான காழ்ப்பும் இருக்கவில்லை. அவர் இயேசுவையும் பாடினார். அல்லாவையும் வாழ்த்தினார். புதுமைப்பித்தனோ இத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றி அவர் கவனம் எடுக்கவில்லை. கிறிஸ்தவர்களை அவர் நஞ்சென வெறுத்தார். கலப்புத் திருமணம் “ஒரு கேலிக்கூத்து” என்பது இந்த யதார்த்தவாதியின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்விருவருக்கும் இடையிலுள்ள வேற்றுமையைக் காண்பதற்கு “கோபாலயங்காரின் மனைவி” என்ற கதை அரிய சாதனமாகின்றது. மகாகவி பாரதியாரால் உயர்ந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கதை புதுமைப்பித்தனின் அப்பழுக்கற்ற யதார்த்தத்தினால் முடித்து வைக்கப்படுகின்றது. புதுமைப்பித்தன் பின்வருமாறு தமது கதையைத் தொடங்குகிறார். “பாரதியார் தமது ~சந்திரிகை என்ற நாவலிலே கோபாலயங்காருக்கும் வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வர்ணித்திருக்கிறார். கதையின் போக்கு, கண்டதும் காதல், என்று கோபால ஜயங்கரின் இலட்சியத்துடன் ஏன் பிரம்மை என்றும் கூறலாம் - முடிவடைகின்றது முடிவு பெறாத 2ஆம் பாகத்தில் வர்ணிப்பாரோ என்னவோ மனிதன் காதல்ப் பெண்ணின் கடைக்கண் பாணியிலே அனலை விழுங்கலாம். புளித்த குழம்பையும், குலைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. புதுமைப் பித்தன் பின்னர் அவர்களுடைய இல்லறத்தில் வரும் சிக்கல்களை சிறிது சிறிதாக எடுத்து விளக்குகின்றார். இடைக்குலத்து சிறுமியாகிய மீனாவுக்கு உயர் அதிகாரியான கோபாலயங்காருக்கு கிட்டப் போகவே பயமாக இருக்கின்றது. இதனால் கோபாலயங்காரர் அவளுக்கு மதுப்பழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார். மீனா மாமிச உணவில்லாமல் வேதனைப் படுகின்றாள். பின்னர் ஒரு உதவியாளனினால் அவளுக்கு மாமிச உணவு கிடைக்கின்றது. மதுபோதையில் மயங்கும் கோபாலயங்காருக்கு மீனா மாமிச உணவைப் பழக்கிவிடுகின்றார். மீனா பிராமணப் பெண்ணாய் மாறுவதுபோல் கோபாலயங்கார் கோனாராக மாறிவிடுகின்றார். கோபாலயங்கார், மீனா இலட்சிய திருமணம் என்ன மாதிரி முடிகின்றது என்று காட்டுகிறார் புதுமைப் பித்தன். “கோபாலயங்காரர் மாமிச பட்சணியான பிறகு சுப்புவையரின் ஏதேச்ச அதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரக இலட்சுமியானாள். 2வருட காலம் அவர்களுக்குச் சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக் கருவியாக கோபாலயங்களின் மேல் நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன. தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரிரீயானாள் கோபாலயங்காரர் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார். இதை மறப்பதற்குக் குடி ஆபிஸிற்குப் போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி, வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி. இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே. இரவு பத்து மணிக்கு அக்கம் பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம். “ஏ! பாப்பான்” என்று மீனாள் கொஞ்சுவாள், “என்னடி எடச்சிறுக்கி!” என்று கோபாலயங்கார் காதலுரை பகருவார். இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள். மீனாள் ‘டிரியோ டிரியோ’ பாட்டில் கோபாலயங்காருக்கு – அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம். இவ்வாறு ஓரே காலத்தில் வாழ்ந்த இரு மேதைகள் வாழ்க்கையை எவ்வாறு பார்த்தனர் என்பதனை அவர்களுடைய படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனாலேதான் புதுமைப் பித்தனின் யதார்த்த வாதம், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமே விருந்தாக இருக்கின்றது. மகாகவி பாரதியாரின் படைப்புக்களோ அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வடிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் வழங்குகின்ற கருவூலமாகத் திகழ்கின்றன. வாழ் நாள் எல்லாம் வறுமையையும், தோல்வியையும், ஏமாற்றத்தையுமே கண்ட பாரதியார்.

“தமிழா கடவுளை நம்பு, உனக்கு நல்ல காலம் வருகிறது” என்று எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.

Monday, December 4, 2006

The "DAVINCI CODE"... ஒரு சவால்!

உலக வரலாற்றில் ஐரோப்பிய வரலாறானது பிரதான இடத்தை வகிக்கின்றது. ஐரோப்பிய வரலாற்றை அறியாதவன் அரை மனிதன் என்று கருதப்பட்ட காலமும் உண்டு. "Faith in Europe, Europe in Faith" விசுவாசம் என்றால் ஐரோப்பா, ஐரோப்பா என்றால் விசுவாசம் என்ற காலம் போய், ஐரோப்பிய மக்கள் பல புதுக்கொள்கைகள், கோலங்கள் என 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் மாறத்தொடங்கினார்கள். பிரான்சிய புரட்சி, அமெரிக்க சுதந்திரப் போர், தொழிற் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்பவை மாற்றத்தின் அடையாளங்களாக வெளிப்பட்டன. அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் சமயக் கொள்கைகளிலும் மாற்றங்கள் தென்படத்தொடங்கின. கிறிஸ்தவ நாகரிகத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள், 20ஆம் நூற்றாண்டில் புதுக்கிறிஸ்தவ கொள்கைகளில் ஆர்வம் காண்பிக்க முற்பட்டன.

இத்தகையதான பல கொள்கைகளை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் கிறிஸ்தவர் களிடையே மனக்குழப்பத்தையும், சிலரிடையே மாற்றத்தையும் ஏற்படுத்த முனைந்தன. இந்நிலையில் தான் 2003ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் டாண் பிறவுண் (Dan Brawn) எழுதிய "த டாவின்சி கோட்" என்ற நாவல் இக்கொள்கைகளை உள்ளடக்கியதாக ஜனரஞ்சகமானதாய், பரபரப்புடன் வெளியிடப்பட்டது. ஆசிரியர் ஓர் ஆங்கில ஆசிரியர். இந்நாவல் 40 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் பிரதிகள் 50 மில்லியன்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சல்மான் ருஷ்டியினால் எழுதப்பட்ட "Satanic Verses" எனப்பட்ட நூலின் பின் உலகில் மிகவும் சர்ச்சைக்குரியதான நூல் இது எனலாம். இந்த நாவல் பிரசுரமான வேளையிலும் பார்க்க கொலம்பியா பிக்சர்ஸ் பதிப்புரிமையை பெற்று திரைப்படமாக, 19.05.2006 இல் காண்பிக்கப்பட்டபோதுதான் மிகப்பிரபல்யமடைந்தது. பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சாதக, பாதகமான கட்டுரைகள் தினப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இன்றும் வந்தவண்ணமிருக்கின்றது. டாண் பிறவுணின் நாவல் இத்தாலியில் தீயிடப்பட்டது. இத்தாலி, பிலிப்பைன்ஸ் போன்ற கத்தோலிக்க நாடுகள் முதலாக இத்திரைப்படம் தடை செய்யப்படவில்லை. இலங்கையிலும், இந்தியாவில் தமிழ் நாடு உட்பட சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டமை அரசியலோ என்றுகூட ஐயுறவேண்டியுள்ளது.

இந்நாவலில் காணப்படும் முக்கிய அம்சங்கள் எவை என அவதானித்தால், டாண் பிறவுண், இயேசுவை ஒரு சாதாரண மனிதனாகவும், மேரிமக்டலின் அவருடைய மனைவியாக இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இருந்தன, இயேசுவின் சீடர்களில் மக்டலினும் ஒருத்தி, மக்டலின் பயத்தின் காரணமாக நாட்டைவிட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ஓடினாள் என்றும், அவளின் வாரிசுகள் இன்னும் வாழ்கின்றன என்றும் "ஓபுஸ் டேயி" (Opus Dei) என்ற கத்தோலிக்க இரகசிய சபை ("Le Tresor Maudit" நூலில் இரகசிய சபையின் பெயர் Prieure de Sion என்ற பெயரால் அழைக்கப்பட்டது.) இந்த உண்மையை மறைக்க பல வழிகளைக் கையாண்டது என்றும் தகவல்கள் பல, ஓவியர் டாவின்சியின் கடைசி இராப்போசன ஓவியத்தில் சங்கேத குறியீடுகளில் மறைக்கப் பட்டிருந்தன என்றும் டாண்பிறவுணின் கற்பனைக்கதை பேசிக்கொண்டே போகின்றது. இதைத்தவிர நோஸ்ரிக் கொள்கையை (Gnostic) அடிப்படையாக வைத்து ஆணும் பெண்ணும் சேர்ந்த மனிதன்தான், முழு மனிதன் எனவும் இதற்கு உதாரணம் டாவின்சியினால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம்; இச்சித்திரத்தில் ஆண் பெண் தன்மைகள் ஒருமித்து இருப்பதாக கருதுகிறார். இயேசுவுக்கும் பூரணத்துவ மடைய ஒரு பெண் தேவைப்பட்டதாக காண்பிக்கிறார் டாண் பிறவுண். டாவின்சியின் கடைசி இராப்போசன ஓவியத்தில் இயேசுவின் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது மேரிமக்டலின் என்றும் சொல்லுகிறார். ஆண் ஆதிக்கத்தை விரும்பிய கொன்ஸ்ரன்ரைன் சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிற்பாடு நற்செய்திகளை மாற்றி எழுதிவைத்தார் என்கிறார்.

டாண் பிறவுணது கற்பனை நூலில், நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் வரலாற்று ரீதியாகவும், ஆதாரமுள்ள உண்மையான நூல்கள் மூலமும் தவறு என்று கிறிஸ்தவ திருச்சபைகளை சார்ந்தவர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இயேசுக் கிறிஸ்து மனிதனாக வந்த இறைமகன்தான். கொன்ஸ்ரன்ரைனின் காலத்திற்கு முன்பே (கி.பி 313) அதாவது நைசி (Nicea) மாநாட்டிற்கு முன்பே இயேசு கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது வேதத் தத்துவம். இதற்கு முற்பட்ட காலத்திலேயே ஆதிக்கிறிஸ்தவர்கள் அவரை வணங்கினார்கள். இன்று அங்கீகரிக்கப்பட்ட (Canonical) நற்செய்திகளின் கையெழுத்துப் பிரதிகள் 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளிலேயே கிடைக்கப்பெற்றன என்றும் அவற்றிடையே ஒற்றுமை இருந்தது எனவும் டாண் பிறவுணின் வாதம் கற்பனை, வரலாற்றுச் சான்றுகளிற்கு புறம்பானது எனவும் விளக்குகிறார்கள். மேலும் நற்செய்தி நூல்களிற்கும், பழைய ஏற்பாட்டிற்குமிடையேயுள்ள தொடர்புகள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாகசொல்லப்பட்டவை நற்செய்திகளில் நிறைவேறியமை என்பன இதன் உண்மைக்கு ஆதாரமாகக் காட்டப்படுகின்றன.

டாண் பிறவுண் பாரம்பரிய கதைகளை பெரும்பாலும் ஆதாரங்களாகக்கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார். மக்டலினைப் பொறுத்தவரையில் அவளிடத்திலிருந்த பேய்களை ஓட்டி சமாதானத்தை இயேசு அவளிற்குக் கொடுத்தமைக்காக அவள் நன்றியும், பணிவும் உள்ளவளாக இயேசுவுக்கு அன்பு காட்டினாள். இயேசுவின் வாழ்க்கையில் மாத்தாள், மரியாள் ஜெருசலேம் வாழ் பெண்கள், வெரோனிக்கா போன்ற பெண்கள் அவரை நேசித்ததை நற்செய்தியை சான்றாக வைத்து வாதிக்கப்படுகிறது. கடைசி இராப்போசனத் தில் யேசுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது ஒரு பெண் அல்ல, இளவயதானவரும் இயேசுவின் அன்பிற்கு நெருங்கியவருமான யோண்தான் எனவும், கி. பி. 33 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை 15ஆம் நூற்றாண்டில் (1495 - 97) வாழ்ந்த டாவின்சி வரைவதற்கு ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. டாவின்சி ஒரு பொறியியலாளரே அன்றி வரலாற்றாசிரியர் அல்லர் என்று காண்பிக்கப்படுகிறது.

இவ்விதமாக டாவின்சி கோடிற்கு எதிரான வாதங்கள் செல்லுகின்றன; சில கிறிஸ்தவ அறிஞர்கள் டாண் பிறவுணது கற்பனையில் பிறந்த நாவலிற்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமற்றது. உண்மை வேறு கற்பனை வேறு என்கிறார்கள். ஆனால், பலர் டாண் பிறவுண் ஒரு நன்மையைப் புரிந்துள்ளார், திருச்சபை புதிய உத்வேகத்தோடு தமது விசுவாசப் பரப்புதலை செய்ய அவர் காரணமாகிவிட்டார் என்கிறார்கள். கட்டுரைகள் உண்மையை ஆதாரத்துடன் காண்பிக்க வெளிவந்துள்ளன. உதாரணமாக, டெனிஸ் பிசர் (Dennis Fisher) எழுதிய நூலைக் குறிப்பிடலாம்.

டாவின்சி கோட் என்ற, நூலை விடுத்து திரைப்படத்தை ஆராயப்புகுந்தால் இப்படத்தின் நெறியாளர் Ron Howard ஒஸ்கார் பரிசு பெற்றவர். "The Beautiful Mind" போன்ற சிறந்த படங்களைத் தயாரித்து புகழ் படைத்தவர். இதில் இரசிகர்களை அந்நியப்படுத்த விரும்பாது சில தவிர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத்திற்கு வசன கர்த்தாவான அகிவா கோல்ட்ஸ்மன் (Akiva Goldsman) "வரலாறு இயேசுவை ஒரு விசேஷ மனிதனாக சொல்கிறது. அவர் ஒர் குழந்தைக்கு தகப்பனாகியும் தெய்வீகத் தன்மையுடன் இருக்கமுடியாதா?" என்ற வசனமும் திரைப்படத்தின் இறுதியில் "எது எப்படியாக இருந்தபோதும் நீ விசுவசிப்பது எது என்பதுதான் முக்கியமானது" என்பதும் சில ரசிகர்களுக்கு சமாதானம் சொல்லுவதாகத் தெரிகிறது. ஏனென்றால் இது டாண் பிறவுணின் கருத்தல்ல என்பதால்தான். கிறிஸ்தவம் தனது 2000 ஆண்டுக்கால வரலாற்றில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் நிமிர்ந்து நிற்பதுபோல்த் தெரிகிறது. திரையுலகில் பல படங்கள் கிறிஸ்துவைப் பற்றி வெளிவந்துள்ளன. அண்மைக் காலத்தில் வெளிவந்த "The Last Temptation of Christ" என்ற ஆங்கிலப்படம் கிறிஸ்து ஒரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதாகத்தான் சித்திரிக்க முயல்கிறது. The Passion of the Christ மெல் ஜிப்சனின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் வரும் காட்சிகள் இஸ்ராயேலரிற்கு எதிரானது என்ற சர்ச்சையை உண்டுபண்ணியது நாம் தெரிந்து கொண்டதே.

மேலும், "The Holy Blood and the Holy Grail" நூலாசிரியர்களால் டாண் பிறவுண் மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தம்மால் எழுதப்பட்ட நூலின் மையக்கருத்தும், டாவின்சி கோட்டின் மையக்கருத்தும் ஒன்றெனவும், தமது நூலைத் தழுவியே டாண் பிறவுண் இந்நாவலை எழுதியுள்ளார் எனவும், இந்த தழுவலுக்காக நஷ்டஈடு தரவேண்டுமெனக் கோரியே வழக்குத் தொடரப்பட்டது. அவ் வழக்கில் டாண் பிறவுண் வெற்றி கண்டார். அவ் வழக்கையொட்டி அவர் ஓர் சிறந்த விற்பனைக்கு ஏதுவான நூலை எழுத ஐந்து உத்திகளைக் கூறினார். அதில் ஒன்றை அவதானித்தால் அவர் டாவின்சி கோட் என்ற நாவலை இந்நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் எழுதினாரா என்று கருதத்தோன்றுகின்றது. அது உங்கள் கவனத்திற்கு;
(1) Pick a Big IDEA with a Gray area.
(2) The first step to select a theme that (You) find particularly intriguing...
(3) The ideal has no clear right and wrong

(4) No defenite good and will, and makes for great debate.”

இத்தகைய நூல்கள், திரைப்படங்கள் அரசாங்கங்களினால் தடைசெய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஒரு சாரார் ஐ. நா. சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித அடிப்படை உரிமை சாசனத்தின்படி அரசியல் யாப்புக்களிற்கு அமைவாக எழுத்துச் சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம் ஆகியவை ஒருவனுக்கு இருக்கிறது, எனவே வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நூல்களையோ, திரைப்படங்களையோ வெளியிட உரிமை உண்டு என்கிறார்கள். புகழ்பெற்ற ஒஸ்கார் வயில்ட் (Oscar wild) என்ற ஆங்கில எழுத்தாளர் "There is no such thing as a moral or an immoral book, Books are well writer or badly written. That is all” என்றார். Voltair (வோல்டயர்) "I dinaprou of what you say, but I will defend to Death your right to say it.” எனக் கூறியுள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணன் என்ற பிரபல கேரள திரைப்படத்தயாரிப்பாளர் "டாவின்சி கோட்" திரைப்படத்தைப்பற்றி United News of India விற்கு பேட்டி அளிக்கும் பொழுது திரைப்படங்களை தடை செய்யும் கட்டுப்பாட்டுச் சபையில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், தான் சமூகத்திற்கும் பார்வையாளரிற்கும் ஒரு பொறுப்புள்ள தயாரிப்பாளர் எனவும் இத்திரைப்படம் ஒரு கற்பனைப்படைப்பே, இயேசுவைப் பற்றி முன்பே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாகரிகமுள்ள எந்த நாட்டிலும் கட்டுப்பாடற்ற பேச்சு, எழுத்துச் சுதந்திரம் கிடையாது. ஆங்கிலச் சட்டத்தில்...

"Every publication in said to be blasphemous which contains any contemptuous, reviling, scurrilous or ludicrous matter relaing to god, Jesus Christ or Bible or the formularies of the Church of England as by law established. it in not blasphanous to speak or publish opinions hostile to the Christian Religion or deny the existence of God, if the publication is couched in decent and temperate language." எனச் சொல்லப்பட்டுள்ளது.
1919களில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியான O.W.Holmes அவர்கள் "Schenck vs the U.S" என்ற வழக்கில் பேச்சுச் சுதந்திரம் பற்றி அவர் குறிப்பிட்டது மிகவும் வரவேற்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் டாவின்சியின் கடைசி இராப்போசன சித்திரத்தைப்போல ஆனால் அரை நிர்வாணமாக இளம் பெண்கள் 12 சீடர்களைப்போல ஒரு உடை தயாரிக்கும் ஸ்தாபனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தோன்றினார்கள். பிரான்சிய கத்தோலிக்க திருச்சபை இந்த ஸ்தாபனத்திற்கெதிராக நடத்திய வழக்கில் வெற்றி கண்டது.
இக்காலத்தில் வெளிவருகின்ற கட்டுரைகள், நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவை சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தினரையோ, மதத்தினரையோ கொச்சைப்படுத்துவதாகவும், வேதனைப்படுத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே வெளிவருகின்றன. முரண்பாடான கருத்துக்களுடன் வெளிவரும் நாவல்கள், திரைப்படங்கள் அதிக வருமானத்தை வெளியிடுவோரிற்கு ஈட்டிக்கொடுப்பதும், அவர்கள் பிரபலங்கள் ஆகிவிடுவதும் இப்படியான வெளியீடுகள் வருவதற்கு காரணமாகவும் ஒரு வகையில் அமைந்து விடுகிறது. ஆகவே சட்டங்களை ஆக்குவதால் மட்டும் இவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது. இந்த யுகத்தில் அவை திருட்டு வீ.சீ.டீ யாகவோ, இன்ரநெற் மூலமாகவோ இளைஞர்களையும், பெரியோர்களையும் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் தமது புத்தியை தீட்டிக் கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும். திருவள்ளுவர் கூறியது போல், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
-நன்றி- "கலைமுகம்"
இவ்வாக்கம் தொடர்பான உங்கள் ஒவ்வொருவரினதும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, November 30, 2006

என்னைப் பாதித்ததில் இதுவும் ஒன்று.....!

இந்த ஆக்கம் எழுதப்படுவதன் நோக்கம் எவ்வித பக்கச்சார்பினையோ, மதச்சார்பினையோ கொண்டமைந்ததாக அல்ல என்பதனை தெரிவிப்பதுடன், அண்மைக்காலங்களில் என்னை மிகவும் பாதித்த சம்பவங்களில் இதுவும் ஒன்னென்ற வகையில் இவ்வாக்கத்தினை எழுதுகின்றேன். இவ்வாக்கத்திற்காக எனக்கு துணைநின்ற திருமறைக்கலாமன்ற கலைமுகம் சஞ்சிகைக்கும் என் நன்றிகள்.


வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகள்.


கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அனைத்துலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை வழிநடத்தியது மட்டுமல்லாது உலக அமைதி, ஒற்றுமை, பல்சமய இணக்கப்பாடு என இன்றைய உலகம் தவறவிட்டுக்கொண்டிருக்கும் உன்னதமான விடயங்கள் பலவற்றுக்காகவும் ஓயாது குரல்கொடுத்துவந்த திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் (இரண்டாம் யோவான் பவுல்) அவர்களின் மறைவும், அதனைத் தொடர்ந்து புதிய திருத்தற்தையாக தெரிவுசெய்யப்பட்ட பதினாறாம் ஆசீர்வாதப்பர் (16ம் பெனடிக்ற்) அவர்களின் வரவும் கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்ல, உலக அரங்கிலேயே அண்மையில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்வுகளாகின்றன.


"கரோல் வோய்டிலா" என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் 18.05.1920 இல் போலந்திலுள்ள வாடோவிச் என்னுமிடத்தில் பிறந்தார். 1946 நவம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், 1958 செப்ரெம்பரில் கிராக்கோ மறைமாவட்டத்தி;ன் துணை ஆயராகவும், அதனைத்தொடர்ந்து 1963ல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகவும், பின்னர் 1967 மே 29ல் கர்தினாலாகவும் பணிநிலை உயர்த்தப்பட்டார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுலின் மறைவிற்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது பாப்பரசரான புனித இராயப்பரைத் தெடர்ந்துவரும் 264வது பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகியதன் பின்னர் தனக்கு முன்னர் பாப்பரசராக இருந்து மறைந்த முதலாம் யோவான் பவுலின் நாமத்தை தனக்கும் சூட்டிக்கொண்டு இரண்டாம் யோவான் பவுல் எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார். 1978 ஒக்ரோபர் 16ல் ரோமிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது திருப்பணியை ஆரம்பித்த திருத்தந்தை அவர்கள் அன்றுமுதல் தனது கண்ணியம் மிக்க வழிநடத்தலால் திருச்சபையை நேரிய வழியில் நடத்தி வந்தார். இக்காலத்தில் அவர் மேற்கொண்ட பல முன்னுதாரணமான முயற்சிகளும், செயற்பாடுகளும் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படும், அன்புசெய்யப்படும், தலைவராக அவரை ஆக்கியது.

இந்த மதிப்பும் நேசிப்பும் எத்தகையதாக இருந்தது என்பதற்கு 03.04.2005 சனிக்கிழமை தனது 85வது வயதில் அவர் மறைந்தபோது உலகெங்கிலும் இருந்து சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகளும், 08.07.2005ல் இடம்பெற்ற அவரது இறுதி நல்லடக்க நிகழ்வின்போது குழுமிநின்ற லட்சக்கணக்கான மக்கள் சமுத்திரம் சாட்சியாக விளங்குகின்றன. உலகில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் மரணச்சடங்குகளில் மிகப்பெரிய இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வாக திருத்தந்தை அவர்களின் மரணச்சடங்கு வரலாற்றில் பதிவாகியது.

திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய திருத்தந்தையாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரட்சிங்கர் அவர்கள் தனது 78வது வயதில் 19.04.2005 தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராகிய பின்னர் 16ம் ஆசீர்வாதப்பர் எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டுள்ள புதிய திருத்தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையில் புனித இராயப்பரை தொடர்ந்து வரும் 265வது பாப்பரசர் ஆவர். புதிய பெயரைச் சூட்டிக்கொண்ட பின்னர் அது தொடர்பாக திருத்தந்தை அவர்கள் குறிப்பிடுகையில்இ முதலாவது உலகப்போரின் போது உலக அமைதிக்காக ஓயாதுஇ அயராது போராடியவர் திருத்தந்தை 15ம் ஆசீர்வாதப்பர் ஆவார். அவரது அமைதி முயற்ச்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே எனது புதிய பெயராக அவரது பெயரைத் தெரிவு செய்தேன் என்றார்.

1927இல் ஜேர்மனியில் பிறந்த புதிய திருத்தத்தை 1951 ஜூன் 29 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1977 மே 28இல் மியூனிக் நகர பேராயராக நியமிக்கப்பட்டார்;. தொடர்ந்து 1977 ஜுன் 27இல் அப்போதைய தி
ருத்தந்தை 6ஆம் சின்னப்பரால் மியூனிக் நகர கர்தினாலாக நியமிக்கப்பட்டார். பின் 1998 நவம்பர் 6இல் கர்தினால் குழுவின் துணைத் தலைவராகவும் 2002 நவம்பர் 30இல் கருதினால் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய திருத்தந்தை அவர்கள் தனது பணியினை 24.04.2005இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

Wednesday, November 29, 2006

பலரசம், பலரசம்!

அகராதி·

குடும்பக்கட்டுப்பாடு
பிள்ளைச் செல்வம் விரும்பாதோர் அனுஷ்டிக்கும் விரதம்

உத்தியோகஸ்தன்
காரியாலயத்தில் மாதச்சம்பளத்திற்கு தவம் கிடக்கும் யோகி

சுயநலம்
மனிதன் தன்னைப் புளுகுவதற்காக கடவுள் கொடுத்த வல்லிமை

அன்பு
தான் வாழ்வதற்காக மற்றோருக்கு மனிதன் காட்டும் பாசாங்கு

யுத்தம்
நாகரீகம் எனும் ஓவியத்தை அழிப்பதற்காக அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படும் ‘இறேசர்’

சிரிப்புப் பழமொழிகள்·

  • சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டடி·
  • ஏர் உழுகிறவன் இழப்பமாணால் எருது மச்சான் முறை கொண்டாடும்·
  • அசைந்து தின்கிறது ஆனை, அசையாமல் தின்கிறது வீடு·
  • பொரிமாவை மெச்சினான் பொக்கை வாயன்.
  • கழுதைக்குபதேசம் காதிலே ஓதினாலும் அபயக்குரலே குரல்

சரியில்லை மெத்தச் சரியில்லை·

சொற்பொழிவாளர் பேசும் நேரத்தை நிகழ்ச்சி நிரலில் அறிவித்துவிட்டு பின்பு வரவேற்பாளரே அவருக்கு இடம் கொடாது பேசிக்கோண்டிருப்பது.

சொற்பொழிவாளர் இடையிடையே சபையோர்களே! நேரமாகிவிட்டது அதனால் இரண்டொரு வார்த்தைகள் முக்கியமாகக் கூறிவிட்டு எனது பேச்சை முடிக்கிறேன் என்று விட்டு மேலும் பேசிக்கொண்டிருப்பதுடன் சபையோரை முணுமுணுக்கவைப்பது.

காலம் கடந்து பேசும் சொற்பொழிவாளர் சபையோரின் குழந்தைகள் பசி தாகத்துடன் இருக்கச் சற்றும் லட்சியம் செய்யாது தான் மட்டும் தாகசாந்தி பண்ணிவிட்டு உபதேசம் பண்ணுவது.


இரண்டு கவிதைகள்

மனசு

1.சில நாட்களாய்

இந்தக் கோழி கேருகிறது.

அப்ப? இன்றோ நாளையோ

முட்டையிடும்.

2. வேலி தாண்டியகோழி:

தெருவில் கிடக்கிறது

பேருந்துடன்

மோதுப்பட்டு நசியுண்டு.

3. இடிந்து போகிறது மனசு

ஒரு கோழியின்உயிருக்காகவல்ல

பல முட்டைகளுக்காக.


ஊமை….

வேர்களின்

குறட்டைச் சத்தம் கேட்டும்

சிரிக்கிறது ரோஜாக்கள்.

கிளைகளை நீட்டி

மல்லாக்காய் கிடந்து

காற்றிற்குப் புரள்கிறது மரம்.

ஒவ்வொரு பூவிற்கும்

ஒவ்வொரு உண்மை பூசப்படுகிறது.

ஒரு பூவின் உண்மை

இன்னொரு பூவிற்குப் பொய்யாகவும்

இன்னொரு பூவின் பொய்

இதற்கு உண்மையாகவும்…….

இப்படியாக பூக்களிள் முரண்பாட்டுக்குள்

முறுக்கேறும் சத்தம் கேட்டு

கண்ணயர்கிறது மரம்.

விடிந்ததும் எழுந்து பார்கின்றது

பூக்களெல்லாம் கொட்டிப்போய் கிடக்கின்றது

மூச்சுப்போய்……… மீண்டும் சிரிக்கிறது

மரம் மௌனமாய்……..!

Monday, November 27, 2006

உங்களுக்குத் தெரியுமா?



இப்ப நீங்க மேல பார்த்த படம் திருமறைக் கலாமன்றத்தின் கடைசி ஆற்றுகை அதழின் முலமா எனக்குக் கிடைச்சுது. ஆனா ஒண்டு மட்டும் உண்மை. இந்தப் படத்தில உள்ள ஆக்களெல்லாம் உங்களில ஆராச்சும் ஒருத்தருக்கோ இல்லாட்டி பலருக்கோ சொந்தக்காறரா இருக்குமெண்டு நினைக்கிறன். தயவுசெய்து யாராயிருந்தாலும் இவயளப்பற்றி இத்துனூண்டு அடையாளமாவது எனக்குச் சொல்லுவியளோ? பிளீஸ் ஸ்.....!!! எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே!